Showing posts with label தற்கொலை ஏன்?. Show all posts
Showing posts with label தற்கொலை ஏன்?. Show all posts

Wednesday, September 21, 2011

மாணவர் தற்கொலை ஏன்? - 8 : மாணவர்களுக்கு அன்புக் கட்டளைகள்!


அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
மாணவர்களே... முதலில் உங்கள் மனத்தைப் பூட்டி வைப்பதை நிறுத்துங்கள். எண்ணங்களை வீட்டில் பகிர்ந்து கொள்ளப் பழகுங்கள்.
உங்கள் நட்பு வட்டம் மற்றவர்கள் முன்பும் பெற்றோர்கள் முன்பும் பெருமையுடன் அறிமுகப்படுத்தும் தகுதியுடையதாக இருக்கும்படிப் பார்த்துக் கொள்ளுங்கள்.
அதேநேரத்தில், நட்பு வட்டம் சொல்வதெல்லாம் சரியென நினைப்பதை நிறுத்துங்கள். உங்கள் பார்வையை விரிவாக்குங்கள். எந்த விஷயமானாலும் உடனடியாக ரியாக்ட் செய்வதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே கேட்டுப் பாருங்கள். சில விஷயங்கள் நீங்கள் செய்வது தப்பென்று தெரிந்தே செய்யத் துணிகிறீர்கள். எந்த விஷயத்தைப் பெற்றோரிடமும் உடன் பிறந்தோரிடமும் தயக்கமில்லாமல் பகிர்ந்து கொள்ள முடிகிறதோ அவை தப்பில்லையெனத் தெரிந்து கொள்ளுங்கள்.
வீட்டிலுள்ளவர்களிடம் நெருக்கத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். பள்ளியில், கல்லூரியில் நடக்கும் நிகழ்வுகளை வீட்டில் சொல்லப் பழகுங்கள். யாரும் எல்லோரிடமும் 24 மணி நேரமும் அன்புடனேயே இருப்பதில்லை. அவ்வப்போது வருத்தத்தையும் கோபத்தையும் காட்டுவதுண்டு. அதற்காக அதையே நினைத்து வருத்தப்பட்டுக் கொண்டிருக்காமல், இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் மீது அக்கறை இருப்பதனால்தான் அவ்வப்போது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கண்டிப்பதோடு கோபித்துக் கொள்ளவும் செய்கிறார்கள். ஆனால், அபாயகரமான முடிவுகளை எடுப்பது எவ்வளவு முட்டாள்தனமென்று புரிந்து கொள்ளுங்கள்.
யாரும் உங்களின் எதிரியல்ல; உங்கள் மேல் நம்பிக்கை வையுங்கள். உங்களை நேசியுங்கள். உங்களின் வாழ்வின் மீது பற்றுக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்வின் மீது உங்களுக்கில்லாத பற்று வேறு யாருக்கு இருக்க முடியும்?
உங்கள் மீது நம்பிக்கை வைத்தால் எத்தனை முறை வீழ்ந்தாலும் தன் காலில் எழுந்து நிற்கும் சக்தியும் தெம்பும் தானாகவே வந்து சேரும்.
புரிதல் அவசியம். சூழ்நிலைகளை, ஆசிரியர்களை, பெற்றோர்களை, நண்பர்களை, உறவுகளைப் புரிந்து கொள்ளப் பழகுங்கள். வகுப்பறைக்குள் ஆசிரியர்களிடம் மரியாதையில்லாமல் நடந்து கொள்வது, எடுத்தெறிந்து பேசுவது, கொஞ்சம் கடிந்து கொண்டால் கூட ப்ரெஸ்ஸைக் கூப்பிட்டுட வேண்டியதுதான்னு சொல்கிற ஜம்பம், நாளைககு நீ பள்ளியிலேயே இருக்கமாட்டே என்று மிரட்டுவதைக் கேட்பதற்கு ஆசிரியர்களுக்கு எப்படியிருக்கும் என ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள். யாரையும் எடுத்தெறிந்து பேசும் முன் உங்களை அந்த இடத்தில் பொருத்திப் பாருங்கள்.
படிப்பு தவிர ஒரு ஆர்வத்தையும் பின்பற்றிச் செல்லுங்கள். படிப்பினால் ஏற்படும் மன அழுத்தத்தைக் குறைக்க இது பெருமளவில் உதவும். எந்நேரமும் அந்த ஆர்வத்தைக் கைவிடாதவர்களாக வாழ்க்கை முழுவதும் உங்களுடன் எடுத்துச் செல்லுங்கள். வாழ்க்கையில் வெற்றியும் சந்தோஷமும் வேறு வேறு தளங்கள். எப்போதும் சந்தோஷமாயிருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அதுவே வாழ்வின் வெற்றிதான்.
எந்த முடிவெடுக்கும் முன்னும் உங்களின் வளர்ச்சியின் பின்னே இருக்கும் நபர்களை நினைவுபடுத்திக் கொள்ளுங்கள். அந்த முகங்களின் பின்னே தெரியும், உழைப்பும், களைப்பும், வலியும், உற்சாகமும், ஆர்வமும் உங்களுக்கு எப்போதும் நினைவில் இருக்கவேண்டும். இப்படிப்பட்ட பிணைப்புக்களின் மூலம்தான் உங்களை நீங்கள் தோல்விகளிலிருந்து மீண்டும் மீண்டும் உயிர்ப்பித்துக் கொள்ள முடியும்.

மாணவர் தற்கொலை ஏன்? - 7


அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
மாணவர்கள் தற்கொலைக்கு எவையெல்லாம் காரணம், யாரெல்லாம் பொறுப்பு என்பதைப் பற்றி விரிவாகப் பார்த்தோம். யார் மீது அதிகத் தவறு என்றோ, யார் பொறுப்பில்லாமல் இருந்தார்கள் என்றோ, எத்தனை சதவிகிதப் பொறுப்புகளைத் தட்டிக் கழித்தீர்கள் என்றோ, இப்படி நடந்து கொண்டிருந்தால் குழந்தைகளின் தற்கொலையைத் தடுத்திருக்கலாம் என்று எடுத்துச் சொல்லவோ அல்லது குற்றம்சாட்டவோ போவதில்லை. நடந்தவை, நடந்தவையாகவே இருக்கட்டும்.
இனிமேல் என்ன செய்யலாம். வெகுதூரம் போய்விட்ட குழந்தைகளிடம் மீண்டும் அவர்களை உங்களிடம் எது அழைத்து வரும் என்பதைப் பற்றி யோசிக்கலாம். நாம் என்ன செய்யவில்லை என்பதைப் பார்க்கலாம். இதைச் செய்வதற்கு நிறைய மெனக்கெடல்கள் தேவையில்லை. பணம் செலவழிக்க வேண்டியதில்லை. கொஞ்சமே கொஞ்சம் மனமும்,நேரப் பங்கிடல் மட்டும் போதும்.
உங்கள் குழந்தையின் அருகில் உட்கார்ந்து இருவருக்கும் பிடித்த டி.வி. நிகழ்ச்சியைக் கடைசியாக எப்போது பார்த்தீர்கள் என்று நினைவிருக்கிறதா?
உங்கள் குழந்தையின் கை விரல்களைப் பிடித்து உணர்நதிருந்திருக்கிறீர்களா?
கையோடு கை சேர்த்துப் பிடித்து உணர்ந்திருக்கிறீர்களா?
குழந்தையின் அருகில் உட்கார்ந்து எத்தனை நாளிருக்கும்னு நினைவிருக்கிறதா?
கை விரல் பிடித்து, கை சேர்த்து அருகில் உட்கார்ந்து அதன் உலகத்துக்குள் சென்று பார்த்திருக்கிறீர்களா?
மகனுக்கு / மகளுக்கு என்ன நிறம் பிடிக்கும் என்று தெரியுமா?
அவர்களுக்குப் பிடித்த பாட்டு தெரியுமா?
அவனுடைய நட்பு வட்டம் பற்றித் தெரியுமா? அவர்களின் பெயர் தெரியுமா?
அவனின் பிடித்த சப்ஜெக்ட் என்ன வென்று தெரியுமா?
அவன் படிக்கும் வகுப்பில் அவன் எந்த செக்க்ஷன் என்று தெரியுமா?
இந்த கேள்விகளுக்கெல்லாம் விடையைச் சொல்லுங்கள். இதற்கான விடைகளில் எது சரியானது என்பது உங்களுக்கே தெரியும்.
எத்தனை அப்பாக்கள் பள்ளியில் வந்து, நான்காவது படிக்கும் தங்கள் மகனை, 'மூன்றாவது வகுப்பில் படிக்கிறான் கூட்டி வாருங்கள்,' எனச் சொல்லியிருக்கிறார்கள் தெரியுமா?
மகன் அல்லது மகளோடு பேசி அவங்க பிரச்னையை, சந்தோஷத்தைப் பேசிப் பகிருங்கள். பாதிப் பிரச்னை தீர்ந்த மாதிரிதான்.
உங்கள் குழந்தை 11 ஆம் வகுப்பு படிக்கும் போது கூட உங்களுக்குக் குழந்தைதான். ஆனால் அவனுக்கென்று ஓர் உலகம் இருப்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.
டீன் ஏஜ் வயதென்பது பல பிரச்னைகளைத் தலைக்குள் ஏற்றிக் கொண்டு, அதுவே உலகம் என அதன் பின் ஓடும் பருவம். நட்பாகட்டும், காதலாகட்டும், படிப்பாகட்டும் எல்லாமே ஓர் உருவமெடுக்கும் வயது. தோல்வி என்னும் வார்த்தையைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாத காலம்.
அவன்/அவளின் உடம்பில் மட்டுமல்ல; மனதிலும் மாற்றம் ஏற்படும் வயது. நட்பு என்னும் வட்டம் பூதாகாரமாக உருவெடுக்கும் வயது. இந்த வயதில் நண்பர்கள் நல்லவர்களாக அமைவது ஒரு வரம். கெட்ட பழக்கங்களுக்கு வழி தடுமாறிப் போகும் வயது இது. இப்போதுதான் உங்களின் நெருக்கம் மிகவும் அவசியம். உங்களின் கண்காணிப்பும் அவசியம். அவன் / அவள் போக்கில் விட்டுவிட்டால் பின்பு வழிக் கொண்டு வருவது கடினம்.
அதற்காக எதிலும் சந்தேகப்படுவதும், எப்போதும் கூடவேயிருந்து பாதுகாப்பதுவும் தவறு. அவர்களை அவர்களே உணரமுடியாமல் அறிந்து புரிந்து கொள்ள வேண்டும். முகமாற்றத்திலேயே பிரச்னையை உணர்ந்து பிரச்னையைச் சரிசெய்யத்
தெரிந்திருக்க வேண்டும்.
பிரச்னையைச் சரி செய்ய வேண்டுமே தவிர, அவற்றைப் பெரிதாக்கக் கூடாது. அது போக எப்போதும் அறிவுரை யாருக்குமே பிடிக்காத ஒன்று. அதைக் கொஞ்சம் அளவோடு அவ்வப்போது உதிர்க்க வேண்டும். வீட்டுப் பொறுப்புகளைப் பகிர்ந்தளியுங்கள். குடும்பத்தில் அவனும்/அவளும் ஒரு முக்கிய உறுப்பினர் என்னும் உணர்வை ஊட்டுங்கள்.
நட்பு என்பது ஓர் உணர்வு. அந்த உணர்வுக்குப் பகிர்தல் இருந்தாலே போதும். குழந்தைகளிடம் வீட்டுக் கவலைகளைப் பகிருங்கள். வீட்டுப் பிரச்னைகளைப் பற்றியும் பேசுங்கள். இப்படிப்பட்ட பேச்சுக்களின் போது உங்களின் விருப்பு வெறுப்புக்களைப் பற்றிக் கலந்து பேசுங்கள். இந்த உணர்வே தங்களுக்கு ஒரு பிரச்னை என்றால் உடனே உங்களைத் தேடி வர வைக்கும்.

மாணவர் தற்கொலை ஏன்? - 6


அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
சிரியர்களே... நீங்கள் வகுப்பறைக்குள் எடுக்கும் ஒவ்வொரு முடிவுகளும் வகுப்பில் எத்தனை மாணவர்களோ அத்தனை பேரையும் சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ பாதிக்கக் கூடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அத்துடன், உங்கள் வகுப்பில் அனைத்து மாணவர்களின் குடும்பத்துடன் நீங்கள் இணைந்திருக்கிறீர்கள் என்பதையும் மறவாதீர்கள்.
வகுப்பறையில் உங்களின் ஒவ்வொரு அசைவுகளும் கவனிக்கப்படுகின்றன. குறிப்பாக, 40 மாணவர்கள் இருக்கும் வகுப்பில் அனைவராலும் நுணுக்கமாகக் கவனிக்கப்படுகிறீர்கள். ஒரு மாணவனின் மனநிலையை, அவனது சுய மரியாதையை உயர்த்துவதோ தாழ்த்துவதோ உங்களின் கையில்தான் இருக்கிறது.
இன்றையச் சூழலில் ஒரு சில ஆசிரியர்களின் முழுக் கவனமும் 'மாணவனை எப்படித் தன் கைக்குள் போட்டுக் கொள்ளலாம்', 'அவனை தமது டியூஷன் வகுப்புக்கு எப்படி வரவைக்கலாம்,' என்பன போன்ற எண்ணத்தில் தான் மேலோங்கியிருப்பதாகத் தெரிகிறது. இந்த எண்ணம் தான் உங்களிடமிருந்து மாணவர்களை அந்நியப்படுத்தி விடுகிறது.
வசதியிருக்கும் மாணவர்கள் மனத்தில் திட்டிக் கொண்டேயாயினும் டியூஷன் வகுப்பில் சேர்ந்து விடுகிறார்கள். ஆனால், வசதியில்லாதவர்கள் உங்களிடமிருந்து மனதளவில் வெகுதூரம் போய்விடுகிறார்கள். ஒரு வகையில் மாணவர்களின் இன்றைய நிலமைக்கும், அவர்களின் நிலை தடுமாறிய போக்குக்கும் கூட அதிக சதவீதம் ஆசிரியர்கள் காரணம் என்பேன்.
குழந்தைகள் சில வாழ்வியல் திறன்களை வீட்டில் பார்த்துக் கற்றுக் கொள்கின்றன. குறிப்பிடத்தக்க வாழ்வியல் திறன்களை பள்ளியில் பார்த்துக் கற்றுக் கொள்கின்றன. தற்போது நல்வழிகளையும் நற்குணங்களையும் பார்த்துக் கற்றுக் கொள்ள சரியான முன்மாதிரிகள் அவர்களுக்கு இல்லை.
மாணவர்களை, 'நீ ஒன்றுக்கும் உதவாதவன்' என்று முத்திரை குத்தாதீர்கள். நாம் கூட குழந்தைப் பருவத்தில் அனைவரின் முன் வாங்கிய கைதட்டல் வாழ்நாள் முழுவதும் கூடவே வருவதை அனுபவித்து உணர்ந்திருப்போம். அதே போல் என்றோ ஒருநாள் ஏற்பட்ட அவமானமும் வாழ்நாள் முழுவதும் கூடவே வந்து துன்புறுத்துவதையும் அறிவோம்; அனுபவித்துமிருப்போம். அதையே குழந்தைகளுக்கும் தரவேண்டுமா?
சிறு விஷயங்களுக்கும் குழந்தைகளை ஊக்குவிப்பதும், உற்சாகப்படுத்துவதும் அவர்களின் வாழ்வையே தலைகீழாக்கும் வித்தைகள் செய்வதுண்டு. பாராட்டுங்கள்; ஊக்குவியுங்கள்; உற்சாகப்படுத்துங்கள். அவர்கள் மேல் பாடம் படிப்பதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையிலும் அக்கறை காட்டுங்கள். தினமும் ஒரு நல்லப் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள். நல்ல செயல்களை மனம் திறந்து அனைவரின் முன் பாராட்டுங்கள். நாற்பது பேரில் நான்கு பேர் அதனால் ஊக்குவிக்கப்பட்டால் கூட முன்னேற்றம்தான்.
ஒரு மரம் நட்டு, அது வளர்ந்து எப்படி அடுத்தவர்களுக்குப் பயன்படுகிறதோ அதே போல்தான் ஓர் ஆசிரியரின் பணியும். அந்தப் பணிக்கிடையில் தற்போதைய பெற்றோர்கள் ஒரு பெரும் தடைக்கல்லாக மாறிவருகிறார்கள் என்பதை மறுக்க முடியாது. மாணவர்களை நெறிமுறையோடு வளர்ப்பது ஒரு பெரிய சவாலாக ஆகிவிட்டது.
'என் பிள்ளையை எதுவும் செய்யவேண்டாம்', 'படிக்காவிட்டாலும் பரவாயில்லை' எனும் பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். 'என்ன செய்வீங்களோ ஏது செய்வீங்களோ தெரியாது. என் பிள்ளைக்கு மார்க் வந்தாகணும்' எனச் சொல்லும் பெற்றோர்களையும் பார்த்திருக்கிறோம். இப்படிப் பிள்ளைகளை நெறிமுறைப்படுத்துவதில் பெற்றோர்களின் தலையீடு அளவுக்கு அதிகமாகவே இருக்கிறது. தாங்கள் செய்யும் தவறுக்கு வக்காலத்து வாங்க பெற்றோர்கள் இருக்கிறார்கள் என்ற தெம்பே மாணவர்களை மீண்டும் மீண்டும் தவறு செய்யத் தூண்டுகிறது.
மாணவர்களுக்கு நாம் எதைக் கற்றுக் கொடுக்கிறோமோ அதையேதான் நம்மிடமும் காட்டுவார்கள். நாம் கேலி செய்தால் அவர்கள் திருப்பிக் கேலி செய்கிறார்கள். நான் எப்போதும் என் ஆசிரியர்களிடமும் சொல்வது... Your values are reflected in your students.
தற்போதைய மாணவர்களின் போக்கு ஆசிரியர்களின் நடத்தையைத்தான் பிரதிபலிக்கச் செய்வதாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. ஆசிரியர்களுக்கும் குழந்தைகளுக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்த வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறோம். உங்களுக்கு மாணவர்களின் மேலிருக்கும் அக்கறையை அவர்களிடம் நடந்து கொள்ளும் விதம் மூலம் அவர்களாகப் புரிந்து கொள்ள உதவுங்கள்.
தண்டனை என்பதை அவர்களின் தவறுகளுக்கானதாக உணர்த்துங்கள். அதை வகுப்புக்கு உள்ளேயே முடித்து விடுங்கள். அதையே தினமும் பார்க்கும்பொழுதெல்லாம் நினைவுபடுத்தத் தேவையில்லை. சில விஷயங்களைத் தண்டனையின்றிப் பேசியே உணர வைக்கலாம். தற்பொழுது ஆசிரியர்கள் லேசாக அடித்தாலே அதனைப் பெரிதாக்கி பத்திரிக்கை, டி,வி என்று போகும் நிலையும் இருந்து வருகிறது. குழந்தைகளின் முன்னால் ஆசிரியர் தவறே செய்திருந்தாலும், ஆசிரியரை "வரட்டும் பார்த்துக்கறேன் அவனை... என்னா ஆட்டம் போடறான்..."அப்படியெல்லாம் தரக்குறைவாகப் பேசாதீர்கள்.
குழந்தைகள் எது செய்தாலும் "நாளைக்குப் பள்ளிக்கூடம் வந்து பாரு உன் டீச்சர்கிட்டே சொல்றேன்" என்றெல்லாம் எப்போதும் மிரட்டி டீச்சரை ஒரு பேய் பூதம் லெவெலுக்கு ஆக்கிவிடாதீர்கள். ஒருசில ஆசிரியர்கள் தண்டனை என்ற பெயரில் கொடுமையான செயல்களைச் செய்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் மாணவர்களுடன் ஒரு விட்டேற்றியான மனநிலையுடன் இல்லாமல் இணக்கமான மன நிலையுடன் இருத்தல் நலம். எப்போதும் அறிவுரைகளை யாரும் ஏற்கத் தயாராயில்லை. அறிவுரைகளைக் கூட விளையாட்டுப் போல இலகுவான மனநிலையுடன் எடுத்துக் கூறுங்கள். மாணவர்கள் என்பவர்கள் மெழுகு போன்றவர்கள் எளிதில் தீப்பற்றிக் கொள்ளவும் செய்வார்கள். எளிதில் உருகவும் செய்வார்கள். எப்படிக் கையாள்கிறோம் என்பதைப் பொறுத்தது என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

மாணவர் தற்கொலை ஏன்? - 5


- அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
து ஓர் உணர்வு சார்ந்த பிரச்னை. இதை இப்படியே போகிற போக்கில் ஒரு கட்டுரையாய், இதற்கான தீர்வாய் எழுதிவிட்டுப் போய்விட முடியாது. இதற்கான தீர்வென அந்தந்தக் குடும்பச் சூழ்நிலை, பள்ளி, கல்லூரியி்ன் சூழ்நிலை சார்ந்த விஷயம். வீட்டில் அந்தக் குழந்தையின் வளர்ப்பு, நண்பர்கள், குடும்பம், சமூகம் என்னும் பலர் சார்ந்த விஷயம்.
ஒரு கட்டுரைத் தொடர் மூலம் அவ்வளவு எளிதில் தீர்வு சொல்லிவிட்டுப் போய் விட முடியாதுதான். ஆயினும், ஒரு கண்ணாடிப் பாத்திரத்தைக் கையாள்வதில் காட்டும் அக்கறையைக் கூட நாம் மாணவர்களைக் கையாள்வதில் காண்பிப்பதில்லை எனபதும் உண்மைதான். எனினும், பொதுவாகச் சில விஷயங்களைக் கவனத்தில் கொண்டால் மாணவர்களை, குழந்தைகளை மன அழுத்தத்திலிருந்து காப்பாற்றலாம்.
வெறும் பாடத் திட்டங்களை மாற்றுவதனாலோ, படிப்பை ஓரம் கட்டுவதாலோ, வந்துவிடப் போவதில்லை எண்ணங்களில் மாற்றம். நிச்சயம் இதற்குக் காரணம் குழந்தைகள் மீது திணிக்கப்படும், வெற்றியோடுதான் வரவேண்டும் வெற்றி மட்டுமே தான்... இரண்டாவது பரிசு கூட வேண்டாம் என்று விரட்டும் பெற்றோர்களின் மனப்பான்மையும் முக்கிய காரணம் என்பதைப் புரிந்து கொள்ளத்தான் வேண்டும்.
அந்த மனப்பானமையைக் குழந்தைகளின் மனநலம் கருதி மாற்றிக் கொள்ள முயற்சிக்கத்தான் வேண்டும். வெற்றி, வெற்றி என்று அவர்களுடைய மூளையிலேற்றி வெற்றி கிடைக்கவில்லையென்றால் வாழவே தகுதியை இழந்து விடுவது போன்ற ஒரு மாயையும் வேண்டாத மன உளைச்சலகளுக்கும் ஆளாக்குகிறது. பின் இதற்குத் தற்கொலையே தீர்வாக மாணவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்கிறார்கள்.
பள்ளிகளில் மென்டர்ஸ், கவுன்சிலர்ஸ், சைக்கியாட்ரிஸ்ட்... இவர்களுக்கு அவசியமென்ன? எப்போதிருந்து இதற்கு அவசியமேற்பட்டது? மாணவர்களின் பிரச்னைகளைக் கேட்க ஆளில்லை. வீட்டிலும் பள்ளியிலும் அவர்களின் நியாயமான கவலைகளைக் கூடப் பகிர்ந்துககொள்ள யாருமில்லாதது ஒரு பெரிய பிரச்னை.
வீட்டில் அப்பா அம்மாக்கள் வேலைக்கு ஓட்டம், ஆசிரியர்கள் சிலபஸ் பின்னால் ஓட்டம்... இப்படி யாருக்காக எல்லோரும் சேர்ந்து ஓட ஆரம்பித்தொமோ அவர்களே கவலைக்கிடமாக இருப்பதுதான் வேதனை.
நர்சரியில் அவனின் படிப்பு பற்றி அவ்வளவு அக்கறை கொண்ட நீங்கள், அவர்களுக்காகச் சின்னச் சின்ன விஷயங்களுக்காகப் பள்ளிக்கு வந்த நாட்களை நினைத்துப் பாருங்கள். இப்போது பெற்றோர் கூட்டத்துக்குக் கூட வர மறுக்கிறீர்கள். அந்தக் குழந்தைக்கு எப்போது உங்களின் கவனமும் அருகாமையும் தேவையோ அப்போது கொஞ்சம் கொஞ்சமாக அவர்களை விட்டு விலகிப் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்று தெரியுமா?
நம்மை விட்டு வெகுதூரம் போய்விட்ட அவர்களை மீட்டெடுக்கத்தான் பள்ளிகளில் மென்டர்ஸ், கவுன்சிலர்ஸ், சைக்கியாட்ரிஸ்ட் போன்றோரின் தேவை ஏற்பட்டிருக்கிறது.
ஒரு மாணவியைத் தவறான முறையில் ஆசிரியர் கஷ்டப்படுத்திய விபரத்தைச் சொல்ல முடியாமல் அழுது அழுது படிகக முடியாமல் பள்ளியை விட்டே நின்றுவிட்ட குழந்தைகளின் கதைகளையும் அறிவோம்.
குழந்தைகளை, மாணவர்களைத் தேர்வுக்குத் தயார்ப்படுத்துவதை விட வாழ்க்கைக்குத் தயார்ப்படுத்துங்கள். அவ்வப்போது NO சொல்லலாம் தப்பில்லை. தோல்வியைச் சந்திக்கும் தைரியத்தை கொடுங்கள். பாசத்தைப் பொருட்கள் மூலம் தெரியப்படுத்துவதை முதலில் நிறுத்துங்கள். கண்டிப்பையும் அவ்வப்போது காட்டுங்கள். கண்டிப்பு என்பதைத் தண்டனைகளால்தான் உறுதிப்படுத்த வேண்டியதில்லை.
விழலாம் தப்பில்லை என்பதைப் பதிய வையுங்கள். வெற்றியையும் தோல்வியையும் வாழ்வின் தினசரி நிகழ்வுகளை எடுத்துக் கொள்வதைப் போல எடுத்துக் கொள்ளப் பழக்குங்கள்.
வாழ்வு, மதிப்பெண்கள் மட்டுமே சார்ந்தது அல்ல என உணர வையுங்கள். அவை வாழ்க்கையை மேம்படுத்த உதவும் கருவிகளுள் ஒன்றே தவிர அதுவே வாழ்க்கையை நிர்ணயிக்கும் மந்திரக் கோல் அல்ல என்பதையும் புரிய வையுங்கள்.

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 4


- அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
ள்ளி மாணவர்களின் மன அழுத்தம் பற்றி விரிவாக பார்த்த அதேநேரத்தில், கல்லூரி மாணவர்களிடமும் இதே வேகத்தில்
தற்கொலைகள் பரவலாகக் காணப்படுகிறது.
கல்லூரி மாணவர்களுக்குத்தான் படிப்பு பற்றிய மன அழுத்தம் கிடையாதே...
எத்தனை அரியர்ஸ் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாமே...
நிறைய அரியர்ஸ் வைத்துக் கொண்டும் இருக்கிறார்களே.?!
பெற்றோர்களின் "படி படி" என்னும் மிரட்டல் இல்லையே..!
ஆசிரியர்களின் அச்சுறுத்தல் இல்லையே...
பிறகு ஏன் இந்தத் தற்கொலை வேகம்..?
இங்கே படிப்பு தரும் மன அழுத்தம் சில இடங்களில் தான். உதாரணத்துக்கு ஐ.ஐ.டி படிப்பில் இருந்தாலும், அதற்குக் காரணம் கோச்சிங்க் சென்டரில் சேர்ந்து இரவு பகல் உழைத்து ஓர் ஓரத்தில் இடம் கிடைத்து விட்ட பின் அதே அளவு திறமையைத்
தொடர்ந்து காட்ட முடியாத நிலை மன அழுத்தத்தைக் கொடுக்கிறது.
மற்றபடி பெரும்பாலும் கல்லூரிகளில் தற்கொலைகளுக்கு காதல் தோல்வியும்,ராகிங்கும் தான் காரணம் என பரவலாக கருத்து நிலவி வந்தாலும் வேறு சில முக்கிய காரணங்களும் நம்மை யோசிக்க வைக்கின்றன.
செல்ஃபோன் போன்ற சாதனங்கள் வாங்க முடியாததாலும், அவற்றை வாங்க பெற்றோர்கள் பணம் தராததாலும் ஏற்படும் விரக்தியாலும் தற்கொலை எண்ணம் மேலிடுவதைப் பார்க்க முடிகிறது. இயல்பாக ஏற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்களுக்காக வாழ்வை முடித்துக் கொண்டதில், இது ஒரு பெரிய மனச் சிக்கலாக இருக்குமோ என எண்ண வேண்டியதாயிருக்கிறது.
தற்போதைய குழந்தைகள் வளரும் சூழ்நிலையைக் கொஞ்சம் கவனித்துப் பார்த்தால், 'இது வேண்டும்' என்று குழந்தைகள் யோசிப்பதற்கும் கேட்பதற்கும் முன்பாகவே அப்பொருள் கிடைத்து விடுகிற நிலை இருக்கிறது. இது பொருளாதார ரீதியில் ஏற்றமடைந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் மட்டுமல்லாது, நடுத்தர வர்க்க குடும்பத்துக் குழந்தைகளுக்கும் பொருந்தும்.
குழந்தைகள் ஏமாந்து விடக் கூடாது என்பதில் பெற்றோர்கள் காட்டும் அக்கறை, எப்படியாவது கடன்பட்டாவது குழந்தைகள் கேட்பதை வாங்கிக் கொடுத்து விடுவது என்ற மனோபாவத்தையே காட்டுகிறது. இது குழந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக் கூடாது என்று எண்ண வைக்கிறது. எப்போதாவது இல்லையென்னும்போது தாங்க முடியாததாகி விடுகிறது.
பெற்றோர்கள் இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருப்பதனால் தங்களால் கொடுக்க முடியாத அருகாமையும், நேரத்தையும், அன்பையும் இப்படிப் பொருட்கள் வாங்கிக் கொடுத்தும், அவர்கள் எது சொன்னாலும் சரியென்று தலையாட்டும் நிலைமைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.
அடுத்ததாக வெளியிலும் கல்லூரியிலும் நடப்பனவற்றை அவ்வப்போது கேட்டு, அவர்களைப் புரிந்து கொள்ளவோ, அவர்களுக்குத் தேவைப்படும் நேரத்தில் அறிவுரை சொல்லவோ பெற்றோர்களுக்கு நேரம் இருப்பதில்லை. நமக்கு மிகவும் அற்பமாக இருக்கும் சில விஷயங்கள் மாணவர்களைப் பொறுத்தவரையில் ஒரு பூதாகாராமான விஷயமாகத் தெரிகிறது.
தற்கொலை முடிவெடுக்கப் பல காரணங்கள் இருந்தாலும், தற்கொலை செய்து கொண்டவர்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் அதிர்வலைகள், மேலும் சமூகத்தைப் பழி வாங்க வேண்டும் எனும் எண்ணத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சமூகம், பெற்றோர், ஆசிரியர், இல்லையென்றால் தன் மீதே வெறுப்பா?
தற்கொலைக்கு முயன்ற ஒரு மாணவன் சொன்ன விஷயம்...
"எனக்கு எந்த விதமான மன அழுத்தமும் இல்லை. ஆனால் என் வீட்டில் அலமாரியின் சாவிக் கொத்து ஒரு அழகிய பெண் பொம்மையுடன் இருந்தது. அது தொங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்கும் போது எனக்கும் தொங்க வேண்டுமெனத்
தோன்றியது."
இவற்றை எல்லாம் பார்க்கும் போது தற்கொலை என்பது ஒரு நிமிடத்தில் எடுக்கும் முடிவுதானோ என்றும், பல நாள் திட்டம் போட்டு நிறைவேற்றப் பட்டதோ என்றும் கூடத் தோன்றும்.
மற்றொரு மாணவன் தற்கொலைக்கு முன் நண்பர்களிடமே சொல்லியிருககிறான்...
"என்ன செய்றேன்னு பாரு... இவரை உண்டு இல்லைன்னு பண்ணிடறேன்," என தன்னை தண்டித்த ஆசிரியரைப் பற்றிச்
சொல்லியிருக்கிறான்.
யாரைப் பழி வாங்குவதாக நினைத்துக் கொண்டு யாரைப் பழி வாங்கியிருக்கிறான்?
எந்தச் சூழ்நிலையையும் ஏற்றுக் கொண்டு அதற்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டு வாழத் தெரியவில்லை. அல்லது, அப்படி வாழக் கற்றுக் கொடுக்கவில்லை. உலகில் சில நிகழ்வுகள் நாம் விரும்புவது போல நடவாமலிருக்கலாம். ஆனால், அதற்காக வாழ்வே அத்துடன் முடிந்து விட்டதாக எண்ணி வாழ்வை முடித்துக்கொள்வதா?
தோல்வியையோ, இல்லையென்பதையோ ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் இல்லை. அல்லது, அந்த மனப் பக்குவத்தை உருவாக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்திக் கொடுக்கவில்லை.
எங்கே... என்ன... எதில் தப்பு..?

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 3


 அருணா சுரேஷ், பள்ளி முதல்வர்
ற்கொலைக்கும் இப்படி மதிப்பெண் பின்னால் ஓடுவதற்கும் என்ன சம்பந்தம்?
பாடத்திட்டம் தரும் மன அழுத்தமா?
ஆசிரியர்கள் தரும் மன அழுத்தமா?
பெற்றோர்கள் தரும் மன அழுத்தமா?
உடன் பயிலும் நண்பர்கள் கொடுக்கும் மன அழுத்தமா?
இந்தக் கேள்வி வரிசையின் பட்டியலில் முதலிடம் பெற்றோருக்குத்தான்.
பெற்றோர்களுக்கு தங்களுடைய குழந்தைதான் முதலிடம் வரவேண்டும் என்ற எண்ணம் நல்லதுதான். ஆனால், எல்லாப் பெற்றோரும் அப்படியே விரும்பினால் இரண்டாவது இடம் யாருமே வாங்கக் கூடாதா?
முதலில் தன் குழந்தையிடம் முதல் மார்க் வாங்கக் கூடிய திறமையிருக்கிறதா என்று பார்ப்பதில்லை. அப்படி அது இல்லாத குழந்தையிடம் அளவுக்கதிகமான எதிர்பார்ப்பதால் எதிர்பார்த்த அளவு குழந்தையால் நடத்திக் காட்ட இயலாமல் போகும் போது மனச் சோர்வடைகிறது குழந்தை. இதனால், பெற்றோர்களுக்கு அவமானத்தைத் தேடி கொடுத்து விட்டோமே என்று வருந்தித் தற்கொலை எண்ணத்துக்கு வித்திடப்படுகிறார்கள்.
இந்த மாணவர்களுக்கு பெற்றோர்களின் கனவுகளைக் கலைத்து விட்டோம் என்ற குற்ற உணர்ச்சியும் இருக்கும். இந்தக் குற்ற உணர்ச்சியே தற்கொலை செய்துக் கொள்ளத் தூண்டுகிறது. ஏற்கெனவே சொல்லியது போல குழந்தைகளை இயல்பாக விரும்பிப் படிக்கும் ஆவலை வரவழைப்பதுவும் கூட ஒரு கலைதான்.
இண்டாவதாக பாடத் திட்டம்.
எந்த விதமான சுய சிந்தனையையும் தூண்டாமல் உருப் போட்டுத் திரும்ப எழுத ஊக்குவிக்கும் ஒரு திட்டம். செயல் முறைகளுக்கோ, தொழில் கல்விக்கோ இடமில்லாத ஒரு திட்டம். ஒரு மாணவனிடம் நடிப்பு, பாட்டு, நடனம், வரைதல், விளையாட்டு என்று எத்தனை கலைகளில் திறமையிருந்தும், அவனால் படித்து ஒப்பிக்க முடியவில்லையென்றால் அவனை திறமைக் குறைவான குழந்தையாகவே மதிப்பிடப்படுகிறான்.
படித்தல் என்னும் கலையை விரும்பி ஏற்றுக் கொள்ளும் அளவில் பாடங்கள் இல்லை. பாடங்கள் குழந்தைகளிடையே ஒருவிதமான பயத்தை ஏற்படுத்துவதாகவே இருக்கிறது. அது தவிரவும் பின்னாளில் வாழ்க்கைக்கு உதவும் வகையிலும் பாடங்களோ பாடத் திட்டங்களோ இல்லை என்பதுதான் வேதனையான விஷயம்.
மூன்றாவதாக ஆசிரியர்கள் தரும் மன அழுத்தம்.
ஒரு மாணவன் ஒரு பரீட்சையில் குறைவாக மதிப்பெண்கள் வாங்கினாலும் போதும்... "ம்... நீயெல்லாம் படித்து..." என நீட்டி முழக்குவது; படிக்காத மாணவர்களை படிககும் மாணவர்களுடன் ஒப்பிடுவது; மாணவர்களைக் கண்டிப்பாக டியூஷன் படிக்க வரச் சொல்லிக் கட்டாயப்படுத்துவது...
ஆசிரியர்களின் மேல் ஒரு குற்றச்சாட்டு எப்போதும் உண்டு. நன்றாக படிக்கும் மாணவர்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து அவர்களையே மேலும் கவனித்து மேலும் அதிக மதிப்பெண் வாங்க உற்சாகப்படுத்துகிறார்கள். வேறொன்றுமில்லை. அந்த மாணவனின் உழைப்பில் பள்ளியும் ஆசிரியரும் பெயர் வாங்கிக் கொள்வார்கள். சராசரி மாணவர்கள் ஒதுக்கப்பட்டு அவர்களின் அறிவு வளர்ச்சிக்கு இடமில்லாமல் போய்விடுகிறது.
மாணவர்கள் தவறாக எழுதிய விடையை வாசித்துக் காட்டி பெரும் மன அழுத்தத்துக்கு ஆளாக்குகிறார்கள். ஒரு சின்ன உதாரணம்...
குழந்தைகள் எழுதித் தரச் சொல்லும் ஸ்லேம் புத்தகத்தில் ஒருமுறை ஒரு மாணவி எழுதியிருந்தது...
'கேள்வி: The most embarrassing situation in your life...
பதில்: When my Maths teacher asks me to come near the board and solve a problem'
இப்படிக் குழந்தைகளின் வாழ்க்கையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவது ஆசிரியர் என்பது தெரியாமலேயே ஆசிரியர்கள் இருக்கிறார்கள் என்பதுதான் வருத்தமளிக்கிறது.
அடுத்ததாக, உடன் பயிலும் மாணவர்களினால் ஏற்படும் மன அழுத்தம்.
படிக்காத மாணவர்களைக் கட்டம் கட்டித் தனியாகப் பிரித்து வைப்பது, குறைவான மதிப்பெண்கள் வாங்கும் மாணவனை அதைப் பற்றியே பேசிக் கிண்டலடிப்பது, டியூஷனுக்கு வராத மாணவர்களைப் பிரித்து வைப்பது, அது தவிர படிப்பு சம்பந்தமில்லாத விஷயங்களிலும் கூட.
உதாரணத்துக்கு... மாணவர்களின் தந்தையின் தொழிலைக் கிண்டல் செய்வது, ஜாதியைக் கிண்டல் செய்வது இப்படி பலவகையான மன அழுத்தங்கள்.

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 2


அருணா சுரேஷ்
மாணவர்கள் தற்கொலைக்குத் தீர்வு என்ன என்று யோசிப்பதற்கு முன்னால், அந்த பாதக எண்ணத்தைத் தூண்டும் காரணிகளைப் பார்ப்போம்.
போட்டி... எங்கும் போட்டி - எதிலும் போட்டி. Survival of the fittest எனும் வாக்கியம்தான் மிக மிக முக்கியமான காரணமாக நினைக்கிறேன். Fittest ஆக இல்லாதவன் வாழ்க்கையில் ஜெயிக்கவே முடியாதா?
ஓடிக் கொண்டேயிருப்பவன் வெற்றி நூலை அறுத்தெறியும் நேரத்தில், அந்த வெற்றிக்கான இலக்கு இன்னும் கொஞ்சம் நகர்ந்து போய்விட்டால் என்ன மனநிலை ஏற்படும் என்பதை அனுபவித்தவர்கள் மட்டுமே உணர முடியும்.
இந்த FITTEST வட்டத்துக்குள் பொருந்த முடியாமல் போவது கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்றாகும்.
மேலும், குழந்தைகள் மீது பெற்றோர்களால் திணிக்கப்பட்ட, வெற்றி மட்டுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற மனப்பான்மையும் கூட தற்கொலைக்கான காரணங்களுள் ஒன்று.
பரீட்சையில் தேர்ச்சி அடைகிற பையனாக இருந்தால் ஃபர்ஸ்ட் ராங்க் எடுக்கவில்லை என்கிற அழுத்தம், நாட்டியம் ஆடுகிறவள் என்றால், முதல் பரிசு வாங்கவில்லையே என்று வருத்தம், பாடுகிற குழந்தையை 'டி.வி.லே பாடப் போ' எனும் ஆர்ப்பாட்டம்...
இப்படியான ஓட்டத்தை நர்சரியிலேயே ஆரம்பித்து விடுகிறார்கள் இந்தப் பெற்றோர்கள்.
30 மார்க் வாங்குபவனை பாஸாகி விடு என்பது, 50 மார்க் வாங்குபவனை 60 வாங்கு என்பது, 60 எடுத்து மூச்சு விடும்போது 70 வாங்க விரட்டுவது, 70 கடந்தவுடன் 80 வாங்கு...
நீ நினைத்த படிப்பு என்று ஆசை காட்டுவது, 80 அடைந்தவுடன் 90 வாங்கு - வகுப்பில் முதல் மாணவனாகு என்றும் வகுப்பில் முதல் மாணவனை பள்ளியில் முதல் வர வெறியேற்றுவது, பள்ளியில் முதல் வந்தால் மாநிலத்தில் முதல் வாங்க அழுத்தம் கொடுப்பது என எல்லையில்லாமல் விரிந்து கொண்டே போகும் எதிர்பார்ப்பு எனும் அலையில் ஒரு நொடியில் வாழ்வையே உதறும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள் சில மாணவர்கள்.
98 வாங்கிய மாணவனைப் பாராட்டி ஊக்குவிக்காமல், 'மீதி ரெண்டு மார்க் எங்கே போச்சு?' என்று ஆரம்பிப்பது, எந்த விதத்தில் நியாயம்?
"தலை தலையாய் அடிச்சுக்கிட்டேன், இந்தக் கணக்கை திருப்பித் திருப்பிப் போட்டுப் பாருன்னு, கேட்டியா!? இப்போ பாரு ரெண்டு மார்க் போச்சு!"
'சபாஷ்' எதிர்பார்த்த குழந்தையிடம் உடனேயே அந்தக் கணக்கை மறுபடி படச் சொல்லி உத்தரவு.
அந்தக் குழந்தை என்ன எதிர்பார்க்கிறது?
நாம் எப்படி நடந்து கொள்கிறோம்?
பாடம் யாருக்குத் தேவை?
குழந்தைகளுக்கா? பெற்றோருக்கா?
பள்ளி மாணவர்கள் இப்படி மதிப்பெண்களுக்குப் பின்னால் உயிரைத் தொலைப்பதுவும், போட்டிகளுக்குப் பயந்து உயிரை விடுவதும் ஒருபக்கம் தொடர்ந்து கொண்டிருக்க, கல்லூரி மாணவர்கள் உயிரை விடுவது அசுர வேகத்தில் ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.
பொதுவில் பொறியியல் கல்லூரிகளில் தற்கொலை நிகழ்வுகள் அதிகமாக இருக்கிறது. காரணம்... ராகிங் ஒரு பக்கம் என்று சொல்லப்பட்டாலும், ஆழ்ந்து கவனித்தால் மேலும் சில பல காரணங்கள் வெளிப்படும். அதையும் தொடர்ந்து கவனிப்போம்.
தற்கொலை செய்ய இந்த மாணவர்கள் எழுதி வைத்த காரணங்கள் அல்லது பிறர் மூலம் அறியக் கிடைத்த காரணங்களில் குறிப்பிடத்தக்கவை:
* செல்ஃபோன் வாங்க பணம் தராததால்
* செல்ஃபோன் இல்லாததால்
* பரீட்சையில் தோல்வி
* மாணவர்கள் கேலி செய்வதால்
* மற்றவர்கள் போல வாழ்வை எதிர்கொள்ள முடியவில்லை
* மற்றவர்கள் இருப்பது போல என்னால் பணம் செலவழிக்க முடியவில்லை
* காதலில் தோல்வி
* குறைந்த மதிப்பெண் காரணமாக பெற்றோர்கள் திட்டியதால்
* நன்றாக படிக்கும் மாணவன் ஒரு சில முறை குறைந்த மதிப்பெண் வாங்கும்போது ஆசிரியர் திட்டியதால்.
* தவறு செய்ததால், 'பெற்றோர்களைக் கூட்டிக் கொண்டு' என்று ஆசிரியர் சொல்லியதால்.
* தேர்வு நன்றாக எழுதவில்லையோ என்ற பயத்தால் (அதே மாணவன் 90 மார்க் வாங்கியிருந்தான் என்பதுதான் வருத்தத்துக்குரியது)
இவற்றை கூர்ந்து நோக்கும் போது மாணவர்களின் வாழ்க்கை அத்தனை எளிதல்லவோ என்றிருக்கிறது. ஆனால், எளிதாக இருந்தவற்றைச் சிக்கலாக்கிக் கொண்டது நாம்தானோ?

மாணவர்கள் தற்கொலை ஏன்? - 1


 அருணா சுரேஷ்
மாணவர்களுக்கு என்ன பிரச்னை?
வாழ்க்கையில் அவர்களை அச்சுறுத்துவது எது?
ஏன் ஓடி ஒளிந்து கொள்ள விரும்புகிறார்கள்?
அடிப்படையில் எங்கே தவறு?
இது ஆரம்பித்தது எப்போது? ஏன்?
இப்படி சில கேள்விகளுக்கு விடை காண முற்பட்டால்... இதற்குக் காரணம் ஆசிரியர்களோ, பள்ளியோ, படிப்புச் சுமையோ அல்ல; தற்போது குழந்தைகளை வளர்க்கும் முறையில் திடீரென ஏற்பட்ட தலைகீழ் மாற்றம்தான் என்பது தெளிவாகிறது.
குழந்தைகள் எது கேட்டாலும் மறுநிமிடம் வாங்கிக் கொடுக்கும் இயல்பு இப்போதைய பெற்றோரிடம் இருக்கிறது. இது குழந்தைகளுக்கு அடைய முடியாத எதுவும் இருக்கக் கூடாது என்று எண்ண வைத்திருக்கிறது. என்ன தவறு செய்தாலும் கண்டிக்கும் வழக்கமோ, தண்டிக்கும் பழக்கமோ கிடையாது. இதனால், குழந்தைகளுக்கு பிறர் கண்டித்தால் தாங்கிக் கொள்ளும் மனநிலை இல்லாமல் போய்விடுகிறது.
முன்பெல்லாம், "என் பிள்ளை, உங்கள் பிள்ளை மாதிரி. எப்படியாவது இவனை நல்வழிப்படுத்துங்கள்" என்று ஆசிரியர்களிடம் சொல்லிப் போவார்கள்.
இப்போதெல்லாம் ஆசிரியர் கொஞ்சம் அதட்டிப் பேசினாலும், "என் பையன் டிப்ரெஷன்லே இருக்கான். அவனை ஏன் சார் திட்டினீங்க," என்று மறுநாளே வந்து நிற்கும் பெற்றோர்கள்தான் அதிகம்.
'எல்லாம் கொடுத்து விடுகிறேன். எது வேண்டுமானாலும் செய்து கொள். மார்க் மட்டும் வாங்கு,' என்று அந்தக் குழந்தையின் திறமைக்கு மீறி எதிர்பார்க்கும் பெற்றோர்களின் மனநிலை தான் குழந்தைகளை இப்படி வாழ்க்கை வெளியை விட்டுத் துரத்துகிறது.
பெற்றோர்களின் நேரம் சுய வாழ்க்கைக்கே பங்கு போட்டுவிடப்படுவதால், குழந்தைகள் தங்களின் மனத்தாங்கல்களை வெளியே காட்டிக் கொள்ளாமல் அடைத்து வைத்துத் தாங்க முடியாமல் முடிவைத் தேடிப் போகின்றார்கள்.
இன்னும் சில பெற்றோர்கள் எப்போதும், "அவனைப் போல படி, இவனைப் போல ஸ்விம்மிங்க் பண்ணு, அவனைப் போல கிரிக்கெட் விளையாடு..." எந்நேரமும் 'போல' பஜனை செய்கின்றனர்.
அத்துடன், "மார்க் குறைஞ்சுடாதேடா, வெளிலே அம்மா தலைகாட்ட முடியாது" என் மன அழுத்தத்துக்கு வித்திடுகின்றனர்.
"நாலு பேர்கிட்டே மார்க்கைச் சொல்ல முடியுதா?!" என வார்த்தைகளால் கொட்டிவிடும் சில பெற்றோர்கள்.
இதுபோன்ற வீட்டின் எதிர்பார்ப்புகள் வாட்டியெட்டுக்கும் வேளையில்ம், "ஃபெயிலானால் தொலைஞ்சே," என்பன போல் பள்ளியில் ஆசிரியர்களின் மிரட்டல் வேறு.
படிக்கும் குழந்தைகள், குறைவாகப் படிக்கும் குழந்தைகளை ஓரம் கட்டுவதும், அவர்களைத் தங்கள் குழுவுடன் இணைக்க மறுப்பதுவும் இன்னொரு வகையான மன அழுத்தம்.
இப்படி எல்லா பக்கங்களில் இருந்தும் வரும் மன அழுத்தங்களுக்கும் ஒரே நாளில் விடுதலையாகத் தான் தற்கொலையைத் தேடிக் கொள்கிறார்கள்.
இதற்கு நிரந்தரத் தீர்வு தான் என்ன?