Wednesday, September 21, 2011

ஆழ்மன சக்தியை பெற முடியுமா?


- என்.கணேசன்
ழ்மன சக்திகளைப் பெறுவது எப்படி என்பதைக் காண்போம் என்று படித்த வாசகர்கள் எத்தனை பேருக்கு அதைப் பெற முடியும் என்ற உண்மையான நம்பிக்கை ஏற்பட்டிருக்கும் என்று தெரியாது. அவநம்பிக்கையும் சந்தேகமும் ஏற்பட்டிருக்கக் காரணங்களும்
உண்டு.
இத்தொடரின் தொடக்கத்தில் இருந்தே பல ஆழ்மன சக்தியாளர்களை நாம் பார்த்தோம். அந்த மனிதர்களைப் பற்றிய விவரங்களைக் கூர்ந்து படித்தவர்களுக்கு இரண்டு உண்மைகள் விளங்கி இருக்கும்.
ஒன்று, பெரும்பாலானோருக்கு அந்த சக்தி தற்செயலாக ஏற்பட்டிருக்கிறது. அல்லது அவர்கள் முயற்சியில்லாமலேயே அந்த சக்தி அவர்களுக்கு இயல்பாகவே அமைந்திருக்கிறது. உதாரணத்துக்கு எட்கார் கேஸ் நோய்வாய்ப்பட்டு கோமா நிலைக்குப்
போய் திரும்பிய போது அவருக்கு மற்றவர்கள் நோய்கள் பற்றியும், அதன் சிகிச்சைகள் பற்றியும் தெரிந்திருந்தது. நினா குலாகினாவுக்குத் தன்னிடம் இயல்பாக இருக்கும் சக்தி ஒரு கட்டத்தில் திடீரென்று தெரிய வந்தது. இவர்கள் ஏதோ பயிற்சி செய்து பெற்றதல்ல இந்த அபூர்வ சக்திகள்.
இரண்டு, நாம் முன்பு கண்ட ஆழ்மன சக்தி வகைகள் அனைத்துமே அனைவருக்குமே இருந்ததில்லை. ஆழ்மன சக்திகள் ஒன்று இருந்தவர்களுக்கு இன்னொன்று இருந்ததில்லை. உதாரணத்துக்கு கிறிஸ்டல் பந்து ஞானியான ஜோசப் டிலூயிஸுக்கு நடக்கப்போகும் விபத்துகள் பற்றி தான் அதிகம் தெரிந்தன. மற்ற சக்திகள் அவரிடம் இருக்கவில்லை. டேனியல் டங்க்ளஸ் ஹோமிக்கு ஆவிகள் தொடர்பு சம்பந்தமான அற்புத சக்திகள் இருந்தன. வேறு சக்திகள் இருக்கவில்லை. காச நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தன் நோயையே குணப்படுத்தும் சக்தி இருக்கவில்லை.
அப்படியானால் ஆழ்மன சக்திகள் அபூர்வமான சிலருக்கு மட்டும் தற்செயலாக வாய்க்கக் கூடிய சக்திகளா? எல்லோரும் அவற்றைப் பெற்று விட முடியாதா? என்ற கேள்விகள் எழுவது இயற்கை. இவற்றுக்கு பதில் விஞ்ஞானத்தில் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஏனென்றால் உலகில் எத்தனையோ அதிசய சக்திகள் விஞ்ஞான விதிகளை அனுசரித்து நடப்பதில்லை. எப்படி அழ்மன சக்திகள் ஏற்படுகின்றன என்று சொல்ல முடியாத விஞ்ஞானம் அந்த சக்திகள் இருப்பதை முறையாக அளக்கவும் முடியாமல் திண்டாடுகிறது. உலகின் தலைசிறந்த விஞ்ஞானியான ஐன்ஸ்டீனே "விஞ்ஞானத்தில் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் இல்லை," என்று ஒத்துக் கொண்டிருக்கிறார்.
இந்தக் கேள்விகளுக்குப் பதில் இந்தியா, திபெத் போன்ற நாடுகளின் மெய்ஞானத்தில் இருக்கின்றது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே பல சித்தர்களும் யோகிகளும் நிறைந்திருந்த இந்த நாடுகளில் இந்த வகை ஞானத்துக்குப் பஞ்சம் இருக்கவில்லை.
பால் ப்ரண்டன் என்ற தத்துவஞானி எழுதிய "ரகசிய இந்தியாவில் தேடல் (A search in secret India)", பரமஹம்ச யோகானந்தரின் "ஒரு யோகியின் சுய சரிதை (Autobiography of a yogi)" போன்ற நூல்களைப் படித்தவர்களுக்கு இதற்கான ஏராளமான உதாரணங்கள் கிடைக்கும்.
ஆழ்மன சக்திகளைப் பெறும் கலையை அக்காலத்தில் இந்தியர்கள் "ராஜ யோகம்" என்று அழைத்தனர். பல சித்தர்கள், யோகிகள், திபெத்திய லாமாக்கள், புத்த மதத்தில் சில பிரிவினர் ஆகியோர் இந்தக் கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்தனர். ஆனால், தங்கள் வித்தைகளை தகுதி வாய்ந்தவர்களுக்கே கற்றுத் தருவதில் அவர்கள் உறுதியாக இருந்தார்கள். இத்தனை பெரிய சக்திகள் தகுதியற்றவர்களுக்குக் கிடைத்தால் நாசமே விளையும் என்ற ஞானம் அவர்களுக்கு இருந்தது. அதனால் அக்காலத்தில் இது போன்ற கலைகள் வாய்வழியாகவே, தகுதியுள்ளவர்களாகக் கருதப்படும் நபர்களுக்கு மட்டுமே
சொல்லித்தரப்பட்டது. பிற்காலத்தில் எழுத்தில் வந்த காலகட்டங்களில் கூட இவை படிக்க சுலபமாகத் தெரிந்தாலும் பின்பற்ற அனைவராலும் முடியாதபடி இருந்தன. இது குறித்து பல யோகிகள் சொல்லியிருந்தவற்றை எல்லாம் தொகுத்து பதஞ்சலி முனிவர் "யோக சூத்திரங்கள்" என்ற நூலை எழுதினார்.
ரத்தினச் சுருக்கமாக சொல்லப்பட்ட இந்த சூத்திரங்கள், ஆழ்மன சக்தி வகைகள் ஒன்பது மட்டுமல்லாமல் சொல்லப்படாத அனைத்து சித்திகளையும் தக்க பயிற்சியால் பெற முடியும் என்று சொல்கின்றன. ஆனால் அந்த பயிற்சிகளில் தேர்ச்சி பெறுவது சாதாரண மக்களுக்கு இமாலய சிகரங்களாகவே இருக்கின்றன.
இந்தியாவைப் போலவே எகிப்திலும் நெடுங்காலமாக இது போன்ற அதீத சக்திகள் குறித்து ஞானம் கொண்டவர்கள் நிறைய இருந்திருக்கிறார்கள். எகிப்திய பிரமிடுகளில் இந்த சக்திகள் குறித்து விவரமாக இரகசிய குறியிடுகளில் எழுதப்பட்டு இருப்பதாகப் பலர் கூறுகிறார்கள். மேற்கு ஆப்பிரிக்காவின் வூடு (Voodoo), பழம் சைபீரியாவில் உருவாகி வட அமெரிக்கா உட்பட உலகில் பல பகுதிகளில் பிரபலமாகியுள்ள ஷாமனிஸம்(shamanism), ஜெர்மனியின் ரோசிக்ரூசியனிஸம் (Rosicrucianism) ஆகியவற்றிலும் அபூர்வ சக்திகள் பற்றிய ஞானம் இருந்திருக்கின்றது. இவற்றிலும் அந்த சக்திகள் பெறும் வழிகள் பற்றிய குறிப்புகள் உள்ளன.
இந்தியாவில் அமெரிக்காவைச் சேர்ந்த கர்னல் ஓல்காட், ரஷ்யாவைச் சேர்ந்த ப்ளாவட்ஸ்கி அம்மையார் இருவரும் சேர்ந்து துவங்கிய தியோசபி (Theosophy) இயக்கத்தில் இருந்தவர்களும் இந்த சக்திகள் குறித்து நிறைய உண்மைகளையும், தங்கள்
அனுபவங்களையும் எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
ஆழ்மன சக்திகளைப் பற்றி முழுவதும் அறியும் ஆர்வத்தில் அவற்றை எல்லாம் ஆழமாகப் படித்த போது பிரமிப்பே மிஞ்சியது. ஆரம்பத்தில் இந்த சக்திகள் பெற ஒரு வாழ்க்கை போதாது என்று தோன்றியது. அந்த சக்திகள் குறித்து ஒவ்வொன்றிலும் பெயர்கள், பயிற்சிகள், வழிமுறைகள் எல்லாம் ஒவ்வொரு மாதிரியாக இருந்தன. சில நேரங்களில் ஒன்றுக்கொன்று எதிர்மறையாகக் கூட இருந்தன. பலதும் தற்காலத்தின் சாதாரண மனிதன் எவ்வளவு முயன்றாலும் தேர்ச்சி பெற முடியாதவையாக இருந்தன.
ஆனால் நன்றாக யோசித்துப் பார்த்த போது இவையெல்லாம் பலரால் செய்ய முடிந்தவை, அந்த மனிதர்கள் அத்தனை பேரும் யோகிகள், சித்தர்கள் அல்ல என்கிற உண்மையும் உறைத்தது. முன்பு குறிப்பிட்டது போல் ஏதாவது ஒரு கணத்தில் மின்னல் கீற்றுகளாக சின்னச் சின்ன விஷயங்களில் (நாம் நினைத்துக் கொண்டிருந்த நபர் திடீரென்று நம் முன்னால் நிற்பது, நாம் பேச வேண்டும் என்ற நினைத்த விஷயத்தை நமக்கு வேண்டப்பட்டவர் தானாகவே நம்மிடம் பேசுவது, உண்மையாகிப் போன உள்ளுணர்வுகள் போன்ற நிகழ்வுகளில்) ஆழ்மன சக்தி நம்முள்ளேயும் வந்து போகுமானால் அவற்றை மேலும் வளர்த்துக் கொள்வதும், அதைத் தக்க வைத்துக் கொள்வதும் முடியாத செயல்களல்ல என்று தோன்றியது.
எனவே மேலே குறிப்பிட்ட பலதரப்பட்ட தகவல் களஞ்சியங்களை மீண்டும் ஆழமாகப் படித்த போது எல்லாவற்றிலும் பொதுவாக இருந்த பல உண்மைகளையும், தகவல்களையும் பெற முடிந்தது. அவற்றை எல்லாம் சேர்த்து ஆழ்மன சக்திகளைப் பெறக் கூடிய வழிகளையும், செய்ய வேண்டியவை, செய்யக் கூடாதவை போன்ற விதிமுறைகளையும் தொகுத்ததை கூடுமான வரை
எளிமையாக இனி பார்ப்போமா?

No comments:

Post a Comment