Wednesday, September 21, 2011

வியக்கவைக்கும் 9 வகை வெளிப்பாடுகள்!


 -என்.கணேசன்
ம்மில் ஒவ்வொருவரும் ஒரு சில சந்தர்ப்பங்களில் ஆழ்மனதின் அற்புத சக்தியை நம் வாழ்க்கையிலேயே கண்டிருப்போம். நாம் ஒருவரைப் பற்றி எண்ணி சிறிது நேரத்தில் அவர் நேரில் வருவதைக் கண்டிருக்கலாம். அல்லது, அவரிடமிருந்து ஃபோன் கால் வந்திருக்கலாம்.
ஒருவரிடம் ஒன்று சொல்ல வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், அவரே அந்தப் பேச்சை நம்மிடம் எடுத்திருக்கலாம். ஃபோன் மணி அடித்தவுடன் இவராகத் தான் இருக்கும் என்று நினைத்து ரிசீவரை எடுத்தால் பேசுவது நினைத்த அதே நபராக இருந்திருக்கலாம். ஆனால், இந்த விஷயங்கள் மிகச் சாதாரணமானவையாக இருப்பதாலும், நம்மை ஆழ்மன சக்தியாளராக நினைக்காததாலும் அவற்றை நாம் பெரிதாக நினைப்பதில்லை.
அதுவே மிகவும் அசாதாரணமான நிகழ்ச்சியாக இருந்தால் மட்டுமே அந்த சக்தியின் தன்மை நம்மால் உணர முடிகிறது. உதாரணத்துக்கு வின்ஸ்டன் சர்ச்சில் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தை சொல்லலாம். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஒரு நாள் தன் காரை நோக்கிச் செல்ல, டிரைவர் வழக்கமாக அவர் அமரும் இடத்தின் கார்க் கதவை திறந்து நின்றார். வின்ஸ்டன் சர்ச்சில் அந்த இடத்தில் அமர முற்படாமல் சுற்றிச் சென்று மறுபக்கக் கதவைத் திறந்து அந்தப் பக்கமே உட்கார்ந்து கொண்டார். சிறிது தூரம் சென்ற பின் அந்தக் காரில் வெடிகுண்டு வெடித்தது. அவர் வழக்கமான இடத்தில் அமர்ந்திருந்தால் அவர் அந்த விபத்தில் கொல்லப்பட்டிருப்பார். இடம் மாறி அமர்ந்ததால் அவர் உயிர் பிழைத்தார். பின் அதைப் பற்றிச் சொல்லும் போது "ஏதோ ஓர் உள்ளுணர்வு வழக்கமான இடத்தில் என்னை உட்கார விடாமல் தடுத்தது," என்று சர்ச்சில் சொன்னார்.
அது உயிரைக் காப்பாற்றிய சம்பவமானதால் இன்றும் பேசப்படுகிறது. அதுவே உப்பு சப்பில்லாத ஒரு நிகழ்வைப் பற்றியதாக இருந்தால் யாரும் அதை நினைவு வைத்துக் கொள்வதில்லை. ஆனால் உண்மையில் ஒருவரைப் பற்றி நினைத்த சிறிது நேரத்தில் அவர் நம் எதிரில் வந்து நிற்பதும், சர்ச்சிலின் வாழ்க்கையில் நடந்த அந்த சம்பவமும் ஆழ்மன சக்தியின் சில வெளிப்பாடுகள் தான்.
ஆழ்மன சக்தியின் வெளிப்பாடுகள் பலதரப்பட்டவை. அவை:
1. Psychokinesis எனப்படும் வெளிப் பொருள்கள் மீது இருக்கும் கட்டுப்பாடு. பொருட்களைப் பார்வையாலேயே நகர்த்துவது, அசைப்பது போன்றவை இந்த வகையில் அடங்கும். நினா குலாகினா என்ற ரஷியப் பெண்மணிக்கு இந்த சக்தி இருந்ததை நாம் முன்பு பார்த்தோம்.
2. Extra Sensory Perception (ESP) எனப்படும் நம் ஐம்புலன்களின் துணையில்லாமல் தகவல்கள் அறிய முடிவது. உதாரணத்துக்கு ஜெனர் கார்டுகளை வைத்து ஜோசப் பேங்க்ஸ் ரைன் செய்த ஆராய்ச்சிகளைச் சொல்லலாம். ஒருவர் எடுத்த கார்டு எது என்பதைப் பார்க்கலாமலேயே சொல்ல முடிந்ததை நாம் முன்பு பார்த்தோம்.
3. Telepathy எனப்படும் ஒரு மனதிலிருந்து இன்னொரு மனத்துக்கு செய்திகளை அனுப்புவது. இது ஆழ்மன ஆராய்ச்சிகளில் ESP வகையிலேயே சேர்க்கப்படுகிறது. மிகவும் நெருக்கமான மனிதர்களுக்கு இடையில் இந்த சக்தியை இயல்பாகவே அதிகம் காணலாம். தாய் - குழந்தை, காதலர்கள், நெருங்கிய நண்பர்கள் இடையே சொல்லாமலேயே உணரும் சக்தி இருப்பதை நம்மால் காண முடியும். வளர்த்தும் செல்லப் பிராணிகளுடன் கூட சில மனிதர்களுக்கு இந்த சக்தி இருக்கும்.
4. Clairvoyance or Remote Viewing எனப்படும் வெகு தொலைவில் உள்ளதையும் காண முடியும் சக்தி. ஆப்பிரிக்கக் காடுகளில் அமெரிக்க விமானம் விழுந்து கிடந்த இடத்தை அட்சரேகை தீர்க்கரேகையோடு ஒரு பெண்மணி சொன்னதை ஜிம்மி கார்ட்டர் தெரிவித்தது நினைவிருக்கலாம். ஆவிகளுடன் பேச முடிவதையும் ஆராய்ச்சியாளர்கள் சிலர் இந்த வகையிலேயே சேர்க்கிறார்கள்.
5. Psychometry என்பது ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடிவது. இதற்கு உதாரணமாக பீட்டர் ஹுர்கோஸ் என்ற டச்சுக் காரரைச் சொல்லலாம். இவர் 1943ல் கீழே விழுந்து மண்டை உடைந்ததில் இந்த சக்தியை யதேச்சையாகப் பெற்றார். இவர் கொலை, கொள்ளை நடந்த இடங்களில் கிடைக்கும் தடயப் பொருள்களைப் பிடித்துக் கொண்டு குற்றவாளிகளை விவரிப்பதில் வல்லவராக இருந்தார். ஒரு வழக்கில் கொலை செய்யப்பட்டவரின் உடலில் இருந்த சட்டையைப் பிடித்துக் கொண்டே கொன்றவனின் அங்க அடையாளங்களைச் சொன்னார். மீசை, மரக்கால் உட்பட சரியாகச் சொல்ல முன்பே சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்திருந்த சிலரில் ஒருவன் அது போல இருக்கவே அவனைப் பற்றி போலீசார் சொல்ல அவன் கொலை செய்த ஆயுதத்தை ஒளித்து வைத்த இடத்தையும் பீட்டர் கூறினார்.
6. Precognition என்னும் நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி. உதாரணத்துக்கு இத்தோடரின் ஆரம்பத்தில் கிறிஸ்டல் பந்து ஞானி டிலூயிஸ் எப்படி பல விபத்துகளை நடப்பதற்கு முன் கூட்டியே சொன்னார் என்பதைப் பார்த்தோம்.
7. Post cognition என்னும் என்ன நடந்தது என்பதை நடந்த பின்னர் அறிய முடிந்த சக்தி. உதாரணமாக மேலே குறிப்பிட்ட பீட்டர் ஹூர்கோஸையே இதற்கும் கூறலாம். இன்றும் சில வெளிநாடுகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க ஆழ்மன சக்தியாளர்களின் இந்த சக்தியைக் காவல்துறை அதிகாரிகள் இரகசியமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
8. Astral Projection or Out of Body Experience (OBE) உடலை விட்டு வெளியேறி பலவற்றையும் காணும் சக்தி. இந்த சக்தியை செத்துப் பிழைத்தவர்கள் என்று சொல்லப்படும் மரணம் வரை சென்று சில வினாடிகள் கழித்து உயிர்பெற்ற சிலர் உணர்ந்திருக்கிறார்கள். இந்த சக்தி ஆழ்மன ஆராய்ச்சிகளிலும் ஆராயப்பட்டிருக்கிறது. இது குறித்து டாக்டர் சார்லஸ் டார்ட் ஆராய்ச்சி செய்திருக்கிறார். 1967ல் அவர் செய்த ஒரு ஆராய்ச்சியில் படுத்த நிலையில் உள்ள ஒரு ஆழ்மன சக்தியாளர் அடுத்த அறையில் தரையில் எழுதி வைக்கப்பட்டிருந்த ஐந்து இலக்க எண் என்ன என்பதை சரியாகச் சொன்னதாகத் தெரிவித்துள்ளார்.
9. Psychic Healing or Spiritual Healing எனப்படும் மருந்துக்களின் உதவியில்லாமல் நோய்களைக் குணப்படுத்தும் சக்தி. இதற்கு உதாரணமாக டாக்டர் ஓல்கா வோராலைப் பார்த்தோம். இந்த குணப்படுத்தும் சக்தியைப் பலர் ஆழ்மன சக்தி வகைகளில் சேர்ப்பதில்லை. இது தெய்வீக சக்தி அல்லது ரெய்கி போன்ற மாற்று சிகிச்சை சக்தி வகைகளில் சேர்க்கிறார்கள். ஆனாலும் இது ஆழ்மன சக்தியிலேயே சேர்ப்பது பொருத்தம் என்று நான் நினைக்கிறேன்.
ஆழ்மன சக்திகள் முழுவதையும் இந்த ஒன்பது வகைகளில் அடக்கி விட முடியாது என்ற போதிலும் இவையே மிக முக்கியமானவை என்று சொல்லலாம்.

No comments:

Post a Comment