Wednesday, September 21, 2011

அமெரிக்க உளவுத்துறையை வியக்கவைத்த ஸ்வான்!



- என்.கணேசன்
ஜிம்மி கார்ட்டர் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த போது, அந்நாட்டு விமானம் ஒன்று ஆப்பிரிக்கா பகுதிக்கு சென்று பின் காணாமல் போயிற்று. ஆப்பிரிக்கக் காடுகளில் எங்கோ விபத்தில் சிக்கி இருக்க வேண்டும் என்று ஊகித்தாலும் அமெரிக்க உளவு
விண்வெளிக்கலங்கள் ஆன மட்டும் முயன்றும் அந்த விமானத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அப்போது, அமெரிக்க உளவுத்துறை (CIA)-யின் தலைவராக இருந்த ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னர் தொலைநோக்கு சக்தி படைத்த ஓர் அபூர்வப் பெண்மணியை அணுகினார். அந்தப் பெண்மணி தன் அபூர்வ சக்தி மூலம் விமானம் இருக்கும் இடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகையைச் சொன்னார். விண்வெளிக்கலத்தின் காமிராக்களை அந்த இடத்தில் மையப்படுத்தி கூர்ந்து பார்த்த போது அந்த விபத்துக்குள்ளாகி இருந்த விமானத்தைக் கண்டுபிடித்தனர்.
இந்தத் தகவலை ஜிம்மி கார்ட்டர் அட்லாண்டாவில் உள்ள ஒரு கல்லூரி மாணவர்களிடம் உரையாற்றிக் கொண்டிருந்த போது வெளியிட்டார். செய்தியாளர்கள் ஸ்டான்ஸ்·பீல்ட் டர்னரும் பின்னர் செய்தியாளர்கள் கேட்டபோது அதை ஒத்துக் கொண்டார். ஜிம்மி கார்ட்டர் வெளிப்படையாகச் சொல்லும் வரை இது போன்ற அதீத மனசக்திகளைப் பற்றி மேல் மட்டத் தலைவர்களோ, அதிகாரிகளோ இது பற்றி வெளிப்படையாகச் சொல்லவில்லை என்றாலும் ரஷ்யாவைப் போலவே அமெரிக்காவும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியது.
உண்மையில் 1981 முதல் 1995 வரை அமெரிக்க அரசாங்கம் மனோசக்திகளைப் பரிசீலிக்க ஐந்து விஞ்ஞான ஆராய்ச்சிக் குழுக்களை நியமித்தது. அந்த ஐந்து அறிக்கைகளுமே முழுமையாக இல்லாவிட்டாலும் பல கேஸ்களில் அசாதாரண நிகழ்வுகளை நிகழ்த்திக் காட்டியிருக்கப்பட்டிருக்கின்றன என்பதை ஒப்புக் கொண்டன. மனித மனம் மற்ற மனித மனங்களுடனும், ஜடப்பொருள்களுடனும் கூட ஏதோ ஒரு வகையில் சம்பந்தப்பட்டிருப்பதாகக் கருதுவதாக அறிக்கைகள் கூறுகின்றன. ஆனால் பெரும்பாலான விஞ்ஞானிகள் விவரிக்க முடியாத அந்த விளைவுகளால் நம்பிக்கை கொள்ள மறுக்கிறார்கள் என்றும் தெரிவித்தனர்.
அதிகமாய் விளம்பரம் செய்யாத, அடக்கி வாசித்த ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கழகத்தை (SRI) அமெரிக்க உளவுத் துறையான CIA மனோசக்தி ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்திக் கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் உயர் அதிகாரியாக இருந்த மேஜர் ஜெனரல் எட் தாம்ஸன் என்பவர் சில வருடங்களுக்கு முன் இங்கிலாந்து தொலைக்காட்சியில் அளித்த பேட்டியில் SRI-யின் சில ஆராய்ச்சிகள் தன்னை மிகவும் கவர்ந்தது என்றும் ஞான திருஷ்டி எனப்படும் தொலை நோக்குப் பரிசோதனைகள் செய்யத் தான் முடிவெடுத்ததாகக் கூறுகிறார்.
SRI யின் ஆரம்பகால (ஜூன் 1972) ஆராய்ச்சிகளில் பங்கு கொண்ட அபூர்வ சக்தி மனிதர்களில் குறிப்பிடத்தக்கவர் நியூயார்க்கைச் சேர்ந்த கலைஞர் இங்கோ ஸ்வான் என்பவர். அவரைப் பற்றிக் கேள்விப்பட்டு ஸ்டான்·போர்டு ஆராய்ச்சிக் கூடத்துக்கு ஆராய்ச்சியாளர்கள் வரவழைத்தனர். அவர் வருவதற்கு முன் ஒரு புதிய வகை மேக்னட்டோமீட்டர் ஒன்றை ஆராய்ச்சிக்கூடத்தின் தரைக்கும் கீழே உள்ள ரகசிய இடத்தில் அனுமினியப் பெட்டியில் செம்பு மற்றும் வேறொரு உலோகத்தால் கவசமாக நன்றாக மறைத்து வைத்தனர். அந்த மேக்னட்டோமீட்டரின் செயல்பாடுகளை ஸ்வானுக்குத் தெரியாமல் கண்காணிக்க மறைவாக வேறு ஒரு ஏற்பாடும் செய்திருந்தார்கள்.
ஆனால், இங்கோ ஸ்வான் வந்தவுடனேயே அந்த மேக்னட்டோமீட்டர் தாறுமாறாக செயல்பட ஆரம்பித்தது. ஸ்வான் தரையின் அடியில் ஏதோ ஒரு கருவியை உணர்வதாகக் கூறினார். அந்தப் புதிய கருவியின் வடிவம் இன்னும் வெளியுலகுக்குப் பிரசுரமாகாதது என்றாலும், ஸ்வான் ஏறத்தாழ சரியாகவே அந்தக் கருவியினை வர்ணித்தார்.
அதைக் கேள்விப்பட்ட அமெரிக்க உளவுத்துறையினர் இருவர் SRI-க்கு வந்து சில சிறிய பரிசோதனைகளை ஸ்வானிடம் செய்தனர். அவர்கள் ஒரு பெட்டியில் மறைத்து வைத்திருந்த சிறு பொருள்களைக் கண்டுபிடிக்கச் சொன்னார். ஸ்வான் பெரும்பாலானவற்றைச் சரியாகச் சொன்னார். ஒரு பெட்டியைக் காண்பித்தவுடன், "வெளிர் காவி நிறத்தில் இலை வடிவமுள்ள பொருள் உள்ளது. அது அசைவது போலத் தெரிகிறது." அந்தப் பெட்டியில் இருந்தது அவர் கூறிய எல்லா அமசங்களும் நிறைந்த ஓர் அந்துப் பூச்சி.
SRI ஸ்வானைப் போலவே வேறு சிலரையும் ஆராய்ச்சிக்குப் பயன்படுத்தியது. சிலருக்கு உண்மையான பெயர்களைத் தவிர்த்து எழுத்துடன் எண்ணை இணைத்து அடையாளப் பெயர்கள் பயன்படுத்தப்பட்டன. அப்படிப்பட்டவர்கள் V1 என்பவர் வெகு தொலைவில் இருந்த குறியிலக்குகளை கிட்டத்தட்ட மிகச் சரியாகவே வரைந்தார். அந்தப் படங்களும், குறியிலக்குகளும் இங்கே காட்டப்பட்டுள்ளன.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்னால் டிஸ்கவரி சேனலிலும் மனதின் சக்திகள் பற்றியஆதாரபூர்வ நிகழ்ச்சிகள் பற்றி சில நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டன. அப்போது அமெரிக்க உளவுத் துறை ஒரு அதீத சக்தி படைத்த நபரைக் கொண்டு ரஷ்ய அணு ஆயுத உற்பத்திக் கிடங்கு ஒன்றின் படத்தை வரைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இப்போது போல விண்வெளிக் கலங்கள் வசதி இல்லாத காலக் கட்டத்தில், ரஷ்யாவுடன் பனிப்போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் செய்யப்பட்ட இந்த முயற்சியில் அந்த நபர் வரைந்த படம் கிட்டத்தட்ட 80 சதவீதத்துக்கும் மேலாகவே பொருந்தி வந்ததாக அந்த நிகழ்ச்சியாளர் கூறினார். பனிப்போர் முடிவடைந்து பின் நேரடியாக அந்த கிடங்கைப் படம் எடுத்து ஒப்பு நோக்கிய போது அதிகாரிகள் அசந்து போனதாக
நிகழ்ச்சியாளர் கூறினார்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அந்த அபூர்வ சக்தி மனிதர் பெயரை வெளியிட மறுத்த நிகழ்ச்சியாளர்கள், அவர் பெயரை எக்ஸ் என்றே அழைத்தார்கள். சில நாட்களுக்கு தினமும் ஒரு அவரை ஒரு குறிப்பிட்ட ராணுவ ரகசிய அறைக்கு அழைத்து வந்து உட்கார வைத்து அதை வரைந்ததாகச் சொன்னார்கள்.
இப்படி விஞ்ஞான வளர்ச்சியில் சிகரத்தையே எட்டியிருந்த வல்லரசு நாடான அமெரிக்கா கூட, முக்கியமாய் CIA போன்ற உளவுத்துறை கூட ஆராய்ந்து ஆழ்மனதின் அற்புத சக்திகளைப் பயன்படுத்தியுள்ளது என்னும் போது அதன் பெருமையையும், உண்மையையும் உணர முடிகிறதல்லவா?

No comments:

Post a Comment