Wednesday, September 21, 2011

உணர்வுத் திறனை கூர்மையாக்குங்கள்!


என்.கணேசன்
தியானம் பற்றி குறிப்பிடுகையில் ஆரம்பத்தில் 'ஒரே இடத்தில் தியானம் செய்யும் போது அந்த இடத்தில் தியான அலைகள் உருவாக ஆரம்பிக்கின்றன. நாளாக நாளாக அந்த அலைகள் வலிமைப்பட ஆரம்பிக்கின்றன. முதலில் தியானம் கைகூட நிறைய நேரம் ஆனாலும் காலப்போக்கில் அந்த இடத்தில் தியானத்திற்காகச் சென்று அமர்ந்த சிறிது நேரத்திலேயே அங்கு உருவாகி இருக்கும் அலைகளின் தன்மையால் தியான நிலைக்குச் சுலபமாகப் போய் விடலாம்,' என்று சொல்லி இருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.
மனிதர்களின் எண்ணங்கள் தொடர்ந்து எண்ணும் போது சக்தி வாய்ந்தவையாக மாறுகின்றன. அவற்றை வாய் விட்டுச் சொல்லாத போதும் அவை சக்தியை இழப்பதில்லை. எண்ணங்களும், இயல்பும் ஒருவரைச் சுற்றி நுண்ணிய அலைகளாக எப்போதும் இருக்கின்றன. காலப்போக்கில் அவர்கள் வசிக்கும் இடத்தில் கூட அந்த நுண்ணிய அலைகளின் தாக்கம் அதிகப்பட ஆரம்பிக்கும் என்று சொல்கிறார்கள்.
உண்மையான மகான்கள் வாழ்ந்த இடங்களுக்கும், சில புனித வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்றவர்கள் அங்கு இருக்கையில் வார்த்தைகளில் சொல்ல முடியாத ஒரு வித அமைதியையும், நிறைவையும் உணர்ந்திருக்கக்கூடும். அந்த மகான்கள் வாழ்க்கைக் காலம் முடிந்து பல ஆண்டுகள் கழிந்த பின்பும் அந்த இடத்தில் அவர்களது ஆன்மிக சக்தி மையம் கொண்டிருப்பதே அதற்குக் காரணம் என்று சொல்லலாம்.
அதே போல அந்த புனித வழிபாட்டுத் தலங்கள் உருவாகிப் பல நூறு ஆண்டுகள் கூட ஆயிருக்கலாம். ஆனால் அந்த தலங்களை நிறுவிய மற்றும் வழிபாடு நடத்தி வந்த ஆன்மிகப் பெரியோரின் சக்தி மற்றும் பக்தி அலைகள் அங்கு இப்போதும் பரவியிருந்து நம்மை ஊடுருவுவதே நாம் உணரும் அந்த அமைதிக்குக் காரணம்.
மனதின் எண்ண அலைகள் சக்தி வாய்ந்ததாக இருந்தால் அவர்களுடைய காலம் கழிந்த பின்னும் அவற்றின் தாக்கம் அப்படியே இருக்கும் என்பதற்கு இதுவே ஒரு சிறந்த உதாரணம். உடல் அழிந்து பல்லாண்டுகள் கழிந்த பின்னும் உள்ளத்தின் எண்ண அலைகள் வீரியமுள்ளதாக இருந்தால் அவை வாழ்வது மட்டுமல்லாமல் மற்றவர்களிடம் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்பது நல்ல எண்ணங்களுக்கு மட்டுமல்லாமல் தீய எண்ணங்களுக்கும் பொருந்தும்.
தியோசபி அமைப்பின் நிறுவனரான ப்ளாவட்ஸ்கி அம்மையார் தன் அதீத சக்திகளுக்குப் பெயர் போனவர். அவர் ஒரு முறை அந்த அமைப்பின் சக நிறுவனரான கர்னல் ஓல்காட் அவர்களுடன் அலகாபாத் சென்றிருந்தார். அவர்களை இரவு உணவுக்கு ஓரிடத்திற்கு சின்னட் என்ற நண்பர் காரில் அழைத்துச் சென்றார். போகின்ற வழியில் கார் ஒரு தெரு முனையைக் கடக்கையில்
ப்ளாவட்ஸ்கி அம்மையார் திடீரென்று உடல் சிலிர்த்தபடி சொன்னார். "இந்த இடத்தில் ஏதோ பெரிய கொடூரம் நடந்திருக்க வேண்டும். இரத்தம் சிந்திய இடத்தைப் போல் நான் உணர்கிறேன்".
அலகாபாதிற்கு ப்ளாவட்ஸ்கி அம்மையார் வருவது அதுவே முதல் முறை. அதுவும் சின்னட் என்பவரின் வீட்டிற்கு வந்து தங்கியவர் அந்த வீட்டை விட்டு வெளியே வருவதும் அதுவே முதல் முறை. அப்படி இருக்கையில் அவருடைய உணர்வின் கூர்மையால் அப்படி உணர்ந்ததைக் கண்டு வியப்பு மேலிட்ட சின்னட் அந்த தெருமுனையின் அருகில் இருந்த ஒரு பெரிய கட்டிடத்தைக் காட்டி சொன்னார்.
"அந்த கட்டிடத்தில் தான் ஒரு காலத்தில் சில ஆங்கிலேய அதிகாரிகள் தங்கி இருந்தனர். சிப்பாய்கள் கலகத்தின் போது ஒரு நாள் இரவு அவர்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கையில் சிப்பாய்கள் அவர்களைக் கொடூரமாகக் கொன்று குவித்திருந்தார்கள்."
சிப்பாய் கலகத்தில் நடந்த அந்த சம்பவம் முடிந்து பல ஆண்டுகள் கழித்தும் ப்ளாவட்ஸ்கி அம்மையார் அலகாபாத்தில் அந்த இடத்திற்குச் சென்றவுடனேயே ஏதோ ஒரு கொடூர சம்பவம் நடந்திருக்கிறது என்பதை உணர முடிந்ததை யோசித்துப் பாருங்கள்.
ப்ளாவட்ஸ்கி அம்மையாரைப் போல சற்று தொலைவிலேயே உணரக் கூடியதாகவும், பல காலம் கழித்து உணரக் கூடியதாகவும் அந்தத் திறன் இல்லா விட்டாலும் நாம் அனைவருமே அந்தந்த இடத்திலும், நிகழ்காலத்திலும் உணரக்கூடிய திறனை ஓரளவு இயல்பாகவே பெற்றிருக்கிறோம். ஆனால் அது பெரும்பாலும் வார்த்தைப் படுத்த முடியாதபடி கூட இருக்கலாம். சில வீடுகளுக்குள்ளேயே நுழையும் போதே ஒரு அசௌகரியமான உணர்வை நாம் பெறுவதுண்டு. அங்கிருந்து சீக்கிரமே போய் விட வேண்டும் என்று தோன்ற ஆரம்பித்து விடும். நம் தன்மைக்கு ஒவ்வாத எதிர்மறையான தன்மைகள் இருக்கிற மனிதர்கள் வசிக்கிற வீடாக பெரும்பாலும் அது இருக்கும்.
கலகலப்பாகவும், மகிழ்ச்சியாகவும் அனைவரும் இருக்கும் ஒரு இடத்தில் திடீரென்று யாராவது ஒரு நபர் உள்ளே வர கலகலப்பும், மகிழ்ச்சியும் காணாமல் போய் ஒரு அசௌகரியமான மௌனம் நிலவுவதை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களுடைய மனநிலைகளுக்கு எதிர்மறையான நபராக அவர் இருந்திருப்பார். அவர் அங்கிருந்து போகும் வரை கலகலப்பு தொடராது. அதே போல ஒரு நபர் வரவால் அந்த இடத்தில் இருக்கும் பலரும் ஒரு புத்துணர்ச்சியையும், மகிழ்ச்சியையும் உணர்வதும் நிகழ்வதுண்டு. அந்த நபரின் இயல்பு நுண்ணலைகள் அந்த மாற்றத்தை ஏற்படுத்துவனவாக இருந்திருக்கும்.
இது போன்ற அனுபவங்கள் கூட சம்பந்தப்பட்ட மனிதர்களின் இயல்பின் நுண்ணலைகள் நல்லதாகவோ, தீயதாகவோ மிகவும் உறுதி படைத்தவையாக இருக்கும் போது மட்டுமே நாம் உணர்கிறோம். அப்படி உணரும் போதும் நாம் அதைப் பற்றி மேற்கொண்டு ஆராயப்போவதில்லை. அதற்கு பெரிய முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. ஆனால் மனிதர்கள், மற்றும் இடங்களுடைய நுண்ணலைகளை தெளிவாக உணர முடிவது ஆழ்மன சக்திகளை அடைய விரும்புவோருக்கு அத்தியாவசியத் தேவை என்று சொல்லலாம்.
பெரும்பாலும் நாம் நம் முயற்சியில்லாமல் உணரும் மற்ற நபர்களுடைய, அல்லது இடங்களுடைய நுண்ணலைகள் நம் ஆழமான இயல்புத் தன்மைகளுக்கு பாதிப்பையோ, தாக்கத்தையோ ஏற்படுத்துவனவாகவே இருக்கின்றன. அவற்றைப் பாதிக்காத, சம்பந்தமில்லாத நுண்ணலைகளை நாம் உணர்வதில்லை. ஆனால் பயிற்சியின் மூலம் நாம் நம் உணர்வுத் திறனை அதிகரித்துக் கொள்ள முடியும். அதனைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் முடியும்.
ஆழ்மன சக்தியின் ஒன்பது வகை வெளிப்பாடுகளில் Psychometry பற்றி குறிப்பிட்டு இருந்தோம். இந்த சக்தி மூலம் ஒரு பொருளை வைத்து அதன் சம்பந்தப்பட்ட விஷயங்களையும், மனிதர்களையும் அறிய முடியும். இச்சக்தி நாம் மேலே குறிப்பிட்ட நுண்ணலைகளை உணரும் சக்தியின் தொடர்ச்சி தான். மனிதர்கள் உபயோகப்படுத்திய இடங்களில் அவர்களுடைய எண்ண மற்றும் இயல்பு நுண்ணலைகள் பரவியிருப்பது போல அவர்கள் உபயோகப்படுத்துகிற பொருள்களிலும் பரவி இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. அதனால் அந்தப் பொருளைக் கையில் வைத்துக் கொண்டு அதை உபயோகப்படுத்திய நபரின் இயல்பு பற்றிய தகவல்கள் சொல்ல முடியும்.
பொதுவாக ஒருவரை அறிய நாம் நம் ஐம்புலன்களின் உதவியையே அதிகம் பயன்படுத்துகிறோம். அவரது தோற்றம், உடை, பேச்சு, நடத்தை ஆகியவற்றை வைத்தே அவரை எடை போடுகிறோம். ஆனால் மனித இயல்பை நன்றாக அறிந்த சாமர்த்தியமான ஏமாற்றுப் பேர்வழிகள் அப்பழுக்கற்ற தோற்றம், நடை, உடை, பேச்சுகளை வெளிப்படுத்தி யாரையும் ஏமாற்ற வல்லவர்களாக இருக்கிறார்கள். ஆனால் தங்கள் உள்ளுணர்வுத் திறன்களை மேம்படுத்திக் கொண்டவர்களை யாரும் அவ்வளவு சுலபமாக ஏமாற்றி விட முடியாது.
இனி பயிற்சிக்குச் செல்வோம்.
எல்லா ஆழ்மனசக்திகளை அடையவும் தேவையான அமைதியான மனநிலையே இதற்கும் முதலில் வேண்டும். சிறிது நேர தியானத்திற்குப் பின் முயற்சிப்பது மிகச் சரியான உணர்வு நிலைக்கு உங்களைத் தயார் செய்யும். ஒரு மனிதரைப் பற்றியோ, இடத்தைப் பற்றியோ நுண்ணலைகள் மூலம் உணர வேண்டுமானால் முதலிலேயே அவரைக் குறித்தோ, அந்த இடத்தைக் குறித்தோ மற்றவர்கள் மூலம் அறிந்த விவரங்களையும் அபிப்பிராயங்களையும் நீங்கள் வைத்துக் கொண்டிருக்கக் கூடாது. அப்படி வைத்துக் கொண்டிருந்தால் அதற்கேற்றபடி உணர நம் கற்பனை வழி வகுக்கக் கூடும்.
ஆரம்ப காலத்தில் கண்களை மூடிக் கொண்டு நுண்ணலைகளை உணர முயற்சி செய்வது நல்லது. பார்வையினால் தான் பல அபிப்பிராயங்களையும் நாம் உருவாக்குவதால் கண்களை மூடிக் கொள்வது அதைத் தவிர்க்கும். தானாக, தெளிவாக ஏதாவது ஒரு தகவலை அறியும் வரை பொறுத்திருங்கள். ஆரம்பத்தில் அதற்கு நிறையவே தாமதமாகலாம். ஆனால் அவசரப்படாதீர்கள். அப்படி பெறும் உணர்வை சில சமயங்களில் வார்த்தையாக்க முடியாமல் போகலாம். ஆனாலும் அந்த உணர்வு தெளிவாகும் வரை அதற்கு வார்த்தையைத் தந்து விடாமல் பொறுத்திருங்கள். பொறுமையாக இருந்தால் விரைவான விளைவுகளைப் பெறுவோம் என்பது ஆழ்மனம் மற்றும் ஆன்மிக மார்க்கங்களில் ஒரு மகத்தான விதி. ஆரம்பத்தில் பிரதானமான ஓரிரு விஷயங்களை மட்டும் தான் உங்களால் உணர முடியும். ஆனால் போகப் போக நிறைய தகவல்களை உங்களால் பெற முடியும்.
நீங்கள் செல்லும் புதிய இடங்களில் உள்ள நுண்ணலைகளை அறிய முயற்சியுங்கள். பின் அந்த இடங்களைப் பற்றி விசாரித்துத் தெரிந்து கொண்டு நீங்கள் அறிந்ததுடன் அது பொருந்தி வருகிறதா என்பதை சரி பாருங்கள். அது போல நீங்கள் சந்திக்கும் புதிய மனிதர்களிடமும் அவர்கள் நுண்ணலைகளை உணர முயற்சி செய்யுங்கள். அதையும் உங்கள் அனுபவத்துடனும், விசாரித்துப் பெறும் உண்மையான தகவல்களுடனும் ஒப்பிட்டு சரி பார்த்துக் கொள்ளுங்கள். பொருந்தி வரா விட்டால் இரு காரணங்கள் இருக்கக் கூடும். ஒன்று உள்ளுணர்வு தரும் தகவலைப் பெறுவதில் அவசரப்பட்டிருப்பதோ, விருப்பு வெறுப்புகளைப் புகுத்தியிருப்பதோ காரணமாக இருக்கலாம். இல்லா விட்டால் நீங்கள் விசாரித்துப் பெற்ற தகவல்கள் தவறாக இருந்திருக்கலாம். அதை ஏற்றுக் கொண்டு மறுபடி தொடருங்கள்.
துவக்கத்தில் நல்லது, தீயது, அன்பு, வெறுப்பு, அமைதி, குழப்பம் என்பது போன்ற மிகப் பொதுவான நுண்ணலைகளைத் தான் உணர முடியும். ஆனால் போகப் போக அந்தப் பொதுவான உணர்வுக்குள் இருக்கும் சூட்சுமமான சில விஷயங்களையும் விடாமல் முயற்சி செய்பவர்களால் கண்டிப்பாக உணர முடியும்.
இதில் நன்றாகத் தேர்ச்சி பெற்றால் இது போல மற்றவர்கள் உபயோகித்த பொருள்களைக் கையில் வைத்து அதில் வெளிப்படும் நுண்ணலைகளை அறிய நீங்கள் முயற்சி செய்யலாம். அந்தப் பொருள்கள் உலோகமாக இருந்தால் அதன் மூலம் வெளிப்படும் நுண்ணலைகள் தெளிவாகக் கிடைக்கின்றன என்று அனுபவஸ்தர்கள் கூறுகின்றனர். ஆட்கள், இடங்கள் வெளிப்படுத்தும் நுண்ணலைகள் அளவுக்கு இந்தப் பொருட்களின் நுண்ணலைகள் பெறுவதில் தினசரி வாழ்க்கையில் பெரிய பயன் இருக்கப் போவதில்லை என்றாலும் ஆராய்ச்சி செய்ய விரும்புபவர்கள் முயன்று பார்ப்பதில் தவறில்லை.
இந்த நுண்ணலைகளைத் தெளிவாக உணர முடிவதில் மிகவும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட 80 அல்லது 90 சதவீதம் தான் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது. அவர்களே 10 முதல் 20 சதவீதம் தோல்வி அடைகிறார்கள் என்கிற போது புதிதாக முயல்பவர்கள் தங்கள் தோல்விகளைப் பெரிதுபடுத்தத் தேவை இல்லை. ஆனால் விடாமல் முயற்சி செய்யச் செய்ய நுண்ணலைகளை உணரும் திறன் அதிகரித்துக் கொண்டே போகிறது என்பது அனுபவ உண்மை.

No comments:

Post a Comment